Tuesday, August 23, 2011

ஜனநாயக போராட்டம்!

திரு. அண்ணா ஹஜாரே அவர்கள் 16/08/2011 தொடங்கி இன்றைக்கு எட்டாவது நாளாக தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். வலிமையான ஜன்லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அவர் போராடுகிறார். மிகவும் அமைதியாக, வன்முறை சிறிதேனுமில்லாமல், ஆபாசமோ பிறர்மீது காழ்ப்புணர்ச்சி கோஷங்களோ இல்லாமல் இப்படியொரு போராட்டத்தை காந்தீய வழியில் இன்றைய காலகட்டத்தில் நடத்த முடிகிறதென்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. காந்திஜி மறைந்து சுமார் 63 ஆண்டுகளுக்குப்பிறகும் அவருடைய அஹிம்சா நெறியில் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை ஒருவரால் நடத்த முடியும் என்பது காந்தீய கோட்பாடுகள் அழியாதவை என்பதையே காட்டுகின்றன. அண்ணாவின் சொல்லுக்கு இத்தகைய மாபெரும் எதிர்பாராத கூட்டம், மகுடிக்கு முன்னால் கட்டுண்டு கிடக்கும் நாகத்தைப் போல கிடக்கிறது என்பது சாதாரண அரசியல்வாதிகளுக்கு மாபெரும் வயிற்றெரிச்சலை உண்டாக்கி இருக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய ஒரு அஹிம்சா போராட்டத்தை எப்படியெல்லாமோ கொச்சைப் படுத்தி ஒழித்துவிட இந்த அரசு முயற்ச்சிகளை செய்து வருகிறது. அண்ணாவையே ஊழல் பேர்வழி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது கிறித்தவ, இசுலாமிய சிறுபான்மை மக்களை தூண்டி அண்ணாவிற்கு எதிராக அறிக்கை விட வைத்திருக்கிறார்கள். புது தில்லியிலிருந்து இந்திய கத்தோலிக்க பிஷப்பு பேரவையும், அகில இந்திய இசுலாமிய தனிநபர் சட்ட வாரியமும், தாருல் உலூமும், ஜமைத் உளம் இ ஹிந்த் என்ற அமைப்பும் அண்ணாவின் போராட்டம் சட்ட விரோதம் என்று அறிக்கை விட்டிருக்கின்றன. இனவெறி, கலவரம், ரகளை, கல்லேரிப்பு, சாலை மறியல், பேருந்து எரிப்பு காயம், உயிரிழப்பு என்று ஒரு நவீன போராட்டத்திற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் ஒரு தனி மனிதன் போராடுவதா? என்று வயிற்றெரிச்சல் கொண்டு இவை அறிக்கை விட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. இவர்களின் டிரேட் மார்க் போராட்டம் எப்படிப்பட்டது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். 

ஒடிசாவில் மதமாற்றம் செய்யும் ஒரு அந்நிய நாட்டவரை சமூக விரோத கும்பல் கொன்றுவிட்டது என்பதற்காக, சட்டம் அதன் கடமையை செய்து கொண்டிருந்த காலகட்டங்களிலேயே, தங்கள் ஆளுகையில் இந்தியாவிலிருக்கும் அனைத்து பள்ளிகளையும் மூடி, மாணவர்களின் பேரணி நடத்தி போராடியவர்கள் இந்த கத்தோலிக்க அமைப்பினர். பள்ளிகளை மூடுவது, குழந்தைகளை வைத்து பேரணி நடத்தி அவர்களின் படிப்பை பாழாக்குவது என்ன ஜனநாயக நடை முறை போராட்டம்தானா?

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சியை ஒரு இசுலாமிய நிறுவனத்தலைவர் புகழ்கிறார் என்பதற்காகவே அவரை தலைமை பதவியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்களே அது ஜனநாயக முறையிலான செயல்தானா? இந்தியாவில் மக்கள் மத்தியில் பிளவையும், பீதியையும் உண்டுபண்ணவே எல்லைக்கப்பாலிருந்து சிறுபான்மை இனத்தை சார்ந்த சமூக விரோதிகள் கண்ட இடங்களிலெல்லாம் குண்டுவைத்து மக்களை கொன்று குவிக்கிறார்களே? அதை கண்டிக்க மனமுமில்லாமல், திராணியுமில்லாமல் வேடிக்கைப்பார்த்து கொண்டிருக்கும் இசுலாமிய அமைப்புகள் ஜனநாயக பாதையையா பின்பற்றுகின்றன?

இதே வார்த்தையை முன்னால் சபாநாயகர் திரு.சோம்நாத் சட்டர்ஜியும் தெரிவித்திருக்கிறார். இவர் பின்பற்றும் கம்யுனிச அமைப்புகள் பந்த் என்ற பெயரிலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் என்ற பெயரிலும் கோடானுகோடி மக்களுக்கு இடையூறு விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் செயல் படுகிறார்களே அது என்ன ஜனநாயக வழிமுறைதானா?

இதற்கிடையில் நாடாளுமன்றம் இப்படித்தான் செயல்பட வேண்டும், இதைத்தான் செயல்படுத்தவேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாதாம். அரசியலமைப்பு நிறுவனங்களின் இறையாண்மை பாதிக்கப்படுமாம். பல அதி புத்திசாலி அறிவுஜீவிகள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். அண்ணா ஒன்றும் நாடாளுமன்றத்தை சிறுமை படுத்தவில்லை. அதன் மூலம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றுதான் கோருகிறார். இதில் எங்கே வந்தது 'உத்தரவு'? அலகாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் இந்திரா காந்தி பதவியில் தொடர்ந்தாரே அவர் நீதிமன்ற இறையாண்மையை மதிக்காத போது இந்த அறிவு ஜீவிகள் அவருக்கு புத்தி மதி சொல்லியிருக்கலாமே! மாநில அரசுகளை மத்திய காங்கிரஸ் அரசுகள் தங்கள் விருப்பப்படி கலைத்த காலங்களில் அது மாநில இறையாண்மையில் குறுக்கிடும் செயல் என்று இவர்கள் புத்திமதி கூறியிருக்கலாமே!

எந்த நாடாளுமன்றமும் தானாக ஒரு பணியை செய்யாது. ஆட்சி யிலிருப்பவரின் விருப்பப்படிதான் அது செயல்படும். யானைபாலம் வாய்ந்த பெரும்பான்மையை வைத்திருக்கும் ஆளும்கட்சி தலைவரின் விருப்பப்படிதான் நாடாளுமன்றத்தில் விவாதங்களோ, நடைமுறைகளோ இருக்கின்றன. அங்கே அவர்கள் விரும்பும் எண்ணங்களே சட்டமாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நடைமுறையையே மேற்கொள்ளுங்கள் என்று பெருபான்மை பெற்றுள்ள ஒரு பிரதமரை வற்புறுத்துவது எப்படி நாடாளுமன்ற நடைமுறையில் தலையிடுவதாகும்? நம்மையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொள்ள இந்த பிற்போக்கு அரசியல் வியாதிகளுக்கு உரிமை உள்ளதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால் அவர்கள் தங்களையல்லவா முட்டாட்கள் என்று ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள்? 

Saturday, August 20, 2011

அண்ணா ஹஜாரே!

அண்ணா ஹஜாரே! இன்றைய இந்தியாவில் இந்த பெயரை தெரியாத மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ அரசியல்வாதி(வியாதி)கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆளும் வர்க்கத்தின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் இந்த முன்னாள் ராணுவ வீரர். சுதந்திர இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டிய கூட்டத்திற்கு பின்னர் ஒரு தனி மனிதனால் ஒரு மாபெரும் கூட்டத்தை கூட்ட அண்ணா அவர்களால் முடிந்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. இந்தியாவை பல பிரச்சனைகள் பிடுங்கி தின்றாலும் மக்கள் அவற்றிற்கெல்லாம் வெகுண்டெழுவது அரிதாகவே நடக்கிறது. சாதி, மத, மொழி, இன, மாநில உணர்வுகளால் மக்கள் உடனடியாக உந்தப்பட்டாலும் அலை அலையாக கூடி வந்தது கிடையாது. அத்தகைய கூட்டங்களில் ஒரு சிலர் கிளர்ச்சி என்ற பெயரிலும், பந்த், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்ற வடிவங்களிலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதே இந்த நாடு சர்வ சாதாரணமாக கண்டு வந்திருக்கும் உண்மை. அந்த வன்முறைகளில் தாங்கள் சிக்கி பலியாகி விடக்கூடாதே என்று பயந்து வீடுகளிலேயே மக்கள் தங்கி விடுவதையும் ஒரு சில சமூக விரோதிகள் ஏற்படுத்தும் நாச செயல்களையும் தங்களுக்கு கிடைத்த ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் எண்ணி விடுவதுண்டு. அதற்கு பயந்து ஆட்ச்சியாளர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுவதுமுண்டு. அத்தகைய காலகட்டத்தில்தான் அண்ணா அவர்கள் தலைமையில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர தருகிறது. அத்தகைய அளவிற்கு மக்கள் ஊழலில் அடிபட்டு கிடக்கிறார்கள். ஒரு திடீர் கூட்டத்தை (unorganized) முறையாக செயல் படும் அளவிற்கு, வன்முறையில் ஈடுபடாத அளவிற்கு, அரசாங்கத்தை பயமுறுத்தும் அளவிற்கு திரட்ட முடிகிறதென்றால் இன்னும் இந்த நாட்டில் காந்தீய நெறிமுறைகள் உயிரோடுதான் இருக்கின்றன என்பது நிருபணமாகிறது. அதுவும் மிகுந்த வலிமையுள்ளதாக இருக்கிறது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

திரு. அண்ணா அவர்களைப்பற்றி ஒரு சிலருக்குத்தான் முழுமையாக தெரியும். சாதாரண மக்களுக்கு அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர், காந்திய நெறியை பின் பற்றுபவர், ஊழலுக்கு எதிராக போராடுகிறார் என்பது மாத்திரமே தெரியும். அவரை நம்பி எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது. இங்கேதான் ஆன்மபலமும், உண்மையின் சக்தியும் நிதர்சனமாக தெரிகிறது. எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழலுக்கு எதிராக போராடுவோம் வாருங்கள் என்று அரை கூவல் விடுகிறார்கள். ஆனால் மக்கள் அவர்கள் சொல்லை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களை நம்பி தெருவில் இறங்குவதுமில்லை. சொல்லபோனால் அவற்றை ஒரு நகைச்சுவையாகவே கருதுகிறார்கள். இப்படி இருக்கையில் அண்ணா அவர்களை நம்பி ஒரு கூட்டம் வருகின்றதென்றால் அண்ணா அவர்களின் நேர்மையான செயல்பாடுகளும், வார்த்தைகளில் உள்ள நம்பிக்கையும்தான் காரணம் என்று கூறவேண்டும். இல்லையென்றால் சோனியாவோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, லாலுவோ, மாயாவதியோ, முலாயமோ, எடியூரப்பாவோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ ஊழலுக்கெதிராக அறிக்கையை விட்டவண்ணம் இருக்கிறார்கள். அவர்களை நம்பி பொது மக்கள் வருவதில்லை. அவர்களை நம்பி வருபவர்கள் அவர்களைப்போன்றே ஆதாயத்தை எதிர்பார்த்து வரும் கட்சிக்காரர்கள், ஊழல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், சாராயவியாபாரிகள் மற்றும் பிற சமூக விரோத செயலை செய்பவர்கள் மாத்திரமே. அவற்றையும் காசுகொடுத்துத்தான் அவர்களால் கூட்ட முடிகிறது. அவ்வாறில்லாமல், சாதாரண மக்கள் தாங்களாக ஒரு மனிதனை நம்பி வருகிறார்கள் என்றால் பிறர் மீது இல்லாத ஒரு நம்பிக்கை அவர்மீதும் அவர் வார்த்தைகளின் மீதும் அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுகிறார்கள், மற்றைய எல்லா களங்கங்களுக்கும் இதுதான் மூல காரணம் என்று நம்புவதாலேயே இப்படி காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அணி அணியாக கிளம்பி வருகிறார்கள். இத்தனைக்கும் அண்ணா அவர்களிடம் வசீகரமோ, வார்த்தை ஜாலங்களோ, அரசியல்வாதிகளிடம் காணப்படும் வாழ்க-ஒழிக போடும் கூட்டமோ கிடையாது.

அண்ணா என்ற வார்த்தை மிகவும் வசீகரமானது. திருவண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை அண்ணாமலை என்றுதான் அழைப்பார்கள். ஆண்ட முடியாத தீப்பிழம்பு என்பது அதன் பொருள். வயதில் மூத்த ஆண்பிள்ளையை இளையவர்கள் அண்ணா என்று அழைப்பது நம் தமிழ் மரபு. நம்மைவிட உயர்ந்தவன் என்பது இதன் பொருள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்களையும் மக்கள் அன்போடு அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். இது ஒருவரின் பெயரின் முன்பாதியை சுருக்கி கூப்பிடுவது போன்றதல்ல. அன்புக்கு பாத்திரமானவரை அழைப்பதாகும். அப்படித்தான் இன்று மீண்டும் ஒரு அண்ணா இந்திய மண்ணில் ஒரு எழுச்சித் தாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் இளைஞர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டிருப்பதுதான் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

திரு. அண்ணா அவர்கள் வைத்துள்ள கோரிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்று மிகவும் கற்றறிந்ததாக நினைப்பவர்கள் கூறுகிறார்கள். அவர் அப்படி என்ன கேட்டுவிட்டார்? ஊழல் செய்யும் அரசியல்வாதி, நீதிபதி, ஆட்சியாளர்கள் போன்றோரை விரைந்து விசாரித்து தண்டிக்க ஒரு நேர்மையான அமைப்பு வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? நந்தன் நிலக்கேணி கூட அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக, "அண்ணா அவசரப்படக்கூடாது, அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்" என்கிறார். 1969 முதல் வெளிச்சத்தை காண முடியாமல் தவிக்கும் முயற்ச்சிக்கு இன்னும் எத்தனை நாளைக்கு நேரம் கொடுக்க வேண்டும்? அண்ணா அவர்கள் எடுத்துள்ளது மிகப்பெரிய ஆயுதம். அது கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் அடிமடியில் கை வைத்துள்ளது. அதனால்தான் அண்ணா அவர்கள் முன்வைக்கும் வாதத்திற்கு பதில்வாதம் தராமல் அவர் அணியினரை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கிறார்கள். குணப்படுகொலை (Character Assassination) செய்யும் தீவிரப்பணியில் இறங்கியிருக்கிறார்கள். முதலில், முன்னாள் தேங்காய்மூடி வக்கீலும் இந்நாள் 2G ராசாவின் வக்கீலுமான கபில் சிபல் என்ற அரிச்சந்திரனை விட்டு அண்ணாத்தரப்பில் நியாயம் இல்லை, அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது, அவர்கள் கூறும் லோக்பால் அவசியமற்றது என்று காக்காய் கூச்சல் போட்டார்கள். அடுத்து, ஒண்ணாம் நம்பர் யோக்கியன் அமர்சிங்கை விட்டு சாந்தி மற்றும் பிரசாந்த் பூஷண்களுக்கு எதிராக ஒரு கள்ள C.D. யை வெளியிட்டார்கள். பிறகு, "அண்ணா அவர்கள் ஒரு ஊழல்வாதி" என்று ஊழல்திலகங்களின் மின்விசிறி மனீஷ் திவாரி அறிக்கை வெளியிட்டார். இப்போது, அருணா ராய் என்கிற பெண்மணி மூலமாக அண்ணாவின் கூட்டத்தை உடைக்கப்பார்க்கிறார்கள். அந்த அம்மையார் மூன்றாவது லோக்பாலை தயாரித்திருக்கிறார்களாம். இரண்டாவதையே ஏற்காமல் பிடிவாதம் பிடிக்கும் அரசு இவர் சொல்வதையா ஏற்கப்போகிறது. இதில் அரசின் கைப்பாவையாக இவர் செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரியவில்லையா? 

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அலிபாபவுக்கெதிரான கூட்டத்தின் தலைவன், நம்முடைய நேர்மையான (?) பிரதமர், "ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பாலை உருவாக்குவோம்" என்கிறார். இதே புண்ணியவான்தான் ராசா செய்ததெல்லாம் தமக்குத்தெரியும், அவர் தம்மிடம் சொல்லிவிட்டுத்தான் செயல்பட்டார், 2G விவகாரத்தில் எல்லாம் முறையாகத்தான் நடந்திருக்கிறது" என்று ராசா கைதாகும் வரைக்கூறிக்கொண்டிருந்தார். இப்போது யோக்கியன் வேஷம்போடுகிறார். வலிமையான லோக்பாலை இவர் எப்படி கொண்டுவருவார்? இவர்கள் நிறைவேற்றத் துடிக்கும் லோக்பால் ஒரு ஜேப்படி (Pick-Pocket) திருடனைக்கூட எதுவும் செய்ய முடியாதே? எதை வைத்து இவர் இப்படியெல்லாம் பேசுகிறார்? காரணமில்லாமல் இருக்க முடியாது. நம்முடைய பிரதமர் பதவிக்கு காங்கிரசில் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் போட்டியாளர் இல்லை. அவர் தலைமைத்தாங்க இருக்கும் காங்கிரஸ் கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டால் பிறகு யார் போட்டியை ஏற்படுத்த முடியும்? சந்தோஷமாக காலத்தைக் கழிக்கலாமே! என்பது அவர் எண்ணம் போலும். 

நவீன அன்னைத்தெரேசா, பதவியைத்துறந்ததாக தியாகி பட்டம் கட்டிக்கொண்டு அத்தகைய பதவிகளில் தன்னுடைய அதிகாரத்தை இயல்பாக செலுத்தும் காங்கிரசின் தலைவியான சோனியாவைப்பற்றி கேட்கவே வேண்டாம். "ஊழலுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடுவோம்" என்று அண்ணாவுக்கு வெட்கமில்லாமல் கடிதம் எழுதுகிறார். குட்ரோச்சியை தப்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தம்முடைய அடிவருடிகளின் ஆட்சியை விட்டு செய்ததே இந்த புண்ணியவதிதான். போபார்ஸ் ஊழலில் போன பணம் திரும்பி வரும் என்று எந்த இந்தியனும் கனவுகூட காண முடியாது. போதாகுறைக்கு 2G யில் இவர்களுக்கு தெரியாமல் ஊழல் நடந்திருக்க முடியாது என்று சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதி சொல்லாமல் சொன்னார் (ராசா தனியொருவராக இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது என்பது அவர் வாதம்) இத்தகைய பெருமைமிகு பெண்மணியுடன் ஒன்று சேர்ந்து ஊழலை ஒழிக்கப் புறப்படுவது கருவாட்டிற்கு பூனையை நம்பி காவல் வைப்பது போலத்தான்.

எதிர்கால நம்பிக்கை நட்ச்சத்திரம், அடுத்த பிரதமர் என்றெல்லாம் இவர்களால் வருணிக்கப்படும் இளைஞர் ராகுல் காந்தி என்ன செய்கிறார்? பிரதமர் பதவியை ஏற்கவும் முடியவில்லை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை. பதவியில் அமராமலேயே ஒரு சூப்பர் பிரதமர் போல செயல் படுகிறார் இந்த மனிதர். மாயாவதிக்கு எதிராக எப்படியெல்லாம் செயல் பட்டால் வரும் தேர்தலில் உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்குகளைப்பெறலாம் என்று செயல் படவே அவருக்கு நேரம்போதவில்லை. ஏற்கெனவே பிகார் தேர்தலில் ரத்தம் காக்க பேசியும் முன்பெல்லாமில்லாத அளவிற்கான தோல்வியை சந்தித்த காங்கிரஸ் உ.பி. யிலும் அந்த கதியை அடையவேண்டும் என்கிற அளவிற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். உ.பி. விவசாயி போராட்டங்களை முன்னின்று நடத்த முனைந்த அவர் மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டத்தை நடத்த முன்வராததற்கு காரணம் அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அது போக இப்போதைக்கு அங்கே தேர்தலுமில்லை. பின் எதற்காக போராடப்போகிறார். இப்படிப்பட்ட மனிதர் சொல்லித்தான் அண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய பிரதமர் உத்தரவிட்டாராம். இந்த காங்கிரஸ்காரர்கள் ராஹுளை புகழ்வதாக எண்ணி பிரதமரை இகழ்ந்திருக்கிறார்கள். இதுகூட புரியாத மனிதரா நம் பொருளாதார மேதை? அதுதான் காங்கிரசை உண்டு-இல்லை என்று பண்ணிக்கொண்டிருக்கிறார். நரசிம்மராவின் சீடரல்லவா? காங்கிரசை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கிறது.


லோக்பால் மட்டுமே ஊழலுக்கு தீர்வல்ல. ஆனால் அந்த முயற்சியில் ஒரு சிறு ஏற்பாடுதான் இது. இதற்கே அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள் என்றால், ஊழலைக்களைய பொதுமக்களாகிய நாம் மிகப்பெரிய சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் அண்ணா உண்டுபண்ணிய எழுச்சித்தீபம் அணையாமல் காக்க வேண்டும். நாம் நேர்மையாக இருப்போம், நேர்மையாக செயல்படுவோம் ஒழுக்கத்தை நம் மூச்சாக கொள்வோம், நம் இளையத்தலைமுறையை அவ்வாறே வளர்ப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டாலொழிய அத்தகைய நிலையை அடைய இயலாது. அவ்வாறு செயல்படுவதொன்றும் சாதாரண காரியமல்ல. வரிசையில் (Queue) நின்று நாம் எத்தனைப்பேர் செல்ல தயாராக இருக்கிறோம். அதிலிருந்து சிலர் விலகிச்செல்லும்போது எத்தனைப்பேர் தட்டிக்கேட்கிறோம். மாறாக நாமுமல்லவா விலகிச்செல்ல முற்படுகிறோம். நாம் ஒருவர் மட்டும் திருந்தினால் போதுமா? என்று நொண்டிச்சாக்கு சொல்லுவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்கிறோமே  தவிர நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட கிடையாது. இத்தகைய நேர்மைக்குறைவு நம்மிடம் இருப்பதாலேயே நாம் அடுத்தவர் செய்யும் தவற்றை தட்டிக்கேட்கும் பலமும் உரிமையும் இழந்து விடுகிறோம். அத்தகைய தன்மை வாய்ந்த நம்மிடமிருந்தே இந்த மோசமான அரசியல்வாதிகள் உண்டாகிறார்கள். ஆக ஊழலை ஒழிப்பதற்கு சட்டம் தேவையில்லை. அது போதவும் போதாது. நம்மிடம் நேர்மையை வளர்த்துக்கொண்டாலேயே ஊழல் தானாக மறைந்து விடும். இருட்டை ஒழிக்க தீபத்தைத்தவிர வேறோர் ஆயுதமிருக்க முடியுமா? உங்கள் ஆதரவை நல்கிட இந்த தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்: Fight Corruption

Thursday, August 11, 2011

புண்படும் தமிழ் உணர்வுகள்

தமிழ் உணர்வுகளை புண்படுத்துவதே தமது தலையாய நோக்கம் என்று மத்திய அரசு செயல் படுகிறதோ என்கிற எண்ணம் நமக்கு வளரத்தான் செய்கிறது. கருணாநிதியின் ஆதரவில் செயல் படும் அரசு அல்லவா அவ்வாறுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். 

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற குழு ஒன்று நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வந்திருந்தது. அது கண்டு ஆத்திரமடைந்த தமழக உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு சபாநாயகர் வந்திருந்த குழுவினரிடம் மன்னிப்பு கூறினாராம். இது பற்றி தமது "துக்ளக்" இதழிலும் கூட திரு. சோ அவர்கள் குறிப்பிட்டு இவ்வாறு செய்திருக்க வேண்டாம், வெளிநடப்பு செய்திருந்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிழக உறுப்பினர்கள் செய்ததில் எந்த தவறுமில்லை. சுரணை உள்ளவர்கள் செய்வதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பஞ்சாபி அல்லது வங்காளி அல்லது இந்திக்காரன் மீது அட்டூழியம் செய்த ஒரு அந்நிய நாட்டு குழுவை இப்படி அழைத்திருப்பார்களா ஆட்சியாளர்கள்? அப்படி நடந்திருந்தால் லாலுவும், முலாயம், பாதல், தாக்கரே அல்லது மம்தா போன்ற வடநாட்டு உறுப்பினர்கள் எல்லாம் மாலையிட்டு மரியாதை செய்து வந்தவனின் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்களா? அல்லது அவர்களின் செய்கைக்கு சபாநாயகர் மன்னிப்பு கேட்டிருப்பாரா? 


அடுத்ததாக நடந்தது இன்னும் கேவலம். 10/08/2011 அன்று சபை அலுவல் பட்டியலில் "இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் பற்றியும் இலங்கை அரசின் செயல்பாடுகள் பற்றியும் விவாதம்" என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. உடனடியாக ஒரு காங்கிரஸ் உறுப்பினர் சபாநாயகரிடம் ஓடி சென்று "அந்நிய நாட்டின் செயல்பாட்டை பற்றி நம் அவையில் விவாதிப்பது மரபல்ல. இது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை. அதில் நாம் தலையிட கூடாது" என்று கூறினாராம். (இப்படிப்பட்ட ஞானோதயம் காங்கிரஸ்காரனுக்கு மட்டும்தான் தோன்றும். இவர்கள் கட்சித்தலைவர்கள் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டபோது அப்படி போடாதீர்கள் நம்மூர் வங்கியிலேயே போடுங்கள் என்று சொல்லவேண்டியதுதானே?) உடனடியாக பிற்பகலில் திருத்தப்பட்ட அவை அலுவல்களை சபாநாயகர் வழங்கினாராம்.அதில் "இலங்கையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள்" என்று மட்டும் இருந்ததாம். எப்படி இருக்கிறது தமாஷ்? ஏன், கடந்த காலங்களில் இவர்கள் அந்நிய நாட்டை பற்றி சபையில் விவாதித்ததே இல்லையா? திபத்தில் சீனாவின் செயல்பாடு, கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) மேற்கு பாகிஸ்தானின் செயல்பாடு, குவைத்தில் இராக்கின் செயல்பாடு, மத்திய கிழக்கில் இஸ்ரேலின் செயல்பாடு, இன்னும் தென்னாப்பிரிக்க, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற எண்ணற்ற நாடுகளின் செயல்பாடுகளை பற்றி இவர்கள் வாய் கிழிய பேசியிருக்கிறார்களே? சமீபத்தில் கூட பர்தா விவகாரத்தில் பிரான்சை பற்றி பேசினார்கள் அல்லவா? அப்படி இருக்கும்போது இலங்கையை மட்டும் ஏன் பேசக்கூடாது? இத்தனை தலைக்குனிவும் தமிழனுக்கு மட்டும் நேர்வதேன்? அதற்கு காரணம் இருக்கிறது. சொரணை கேட்ட கருணாநிதி கும்பல் மத்திய அரசை ஆதரிக்கிறது. இனத்தை காட்டிக்கொடுத்தல், ஊரை கொள்ளை அடித்து குடும்பத்தை வளர்த்தல், தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்துதல் என்று பல இழிவான செயல்களை இந்த கும்பல் செய்து விட்டு தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட காங்கிரசின் கொத்தடிமையாக தி.மு.க. இருப்பதால்தான் ஒட்டுமொத்த தமிழினமும் இப்படி தலைகுனிய நேரிடுகிறது. இதை தலைநிமிர செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. 

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்விதான் தர வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு (09/08/2011) வழங்கி விட்டது. இது பற்றிய சர்ச்சைக்கு தீர்வு அளிக்கப்பட்டுவிட்டது. இனி மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியாக கல்விப்பணியை பார்க்கலாம். கல்வி தரமானத அல்லது தரமற்றதா என்பதை வரும் காலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். IIM, IIT போன்ற கல்வி கூடங்கள் நடத்தும் தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெற முடியாத நிலை அரசு கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சமச்சீர் கல்வி என்ற போர்வையில் அரசு பள்ளிகளின் நிலைமை விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. இனி தமிழக மாணவர்கள் எப்படி செயல் பட போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும். 

இந்த சமச்சீர் கல்வி குளறுபடியில் இரண்டு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒன்று ஜெயலலிதா அரசு காட்டிய முதிர்ச்சி மற்றது நீதி மன்றங்களின் செயல்பாடுகள்.

1. சமச்சீர் கல்வி குறித்து எந்த ஒரு தீர்ப்பு வந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்று சட்டசபையில் ஒரு நாள் முன்னதாகவே அறிவித்து, தீர்ப்பு வெளிவந்தவுடன் அதை மறுபடியும் கூறிய ஜெயலலிதாவின் உறுதியும் தைரியமும் பாராட்டத்தக்கது. அவர் வேண்டுமானால் பிடிவாதம் பிடித்திருக்கலாம். உச்ச நீதி மன்ற தீர்ப்பை புறம் தள்ளி சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றியிருக்கலாம். இதற்கெல்லாம் ஏற்கெனவே நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல் படுத்தாமல் புதிய சட்டம் இயற்றியது. காவிரி நதி நீர் பிரச்சனையிலும் கர்நாடக அரசு இப்படித்தான் செய்தது. இட ஒதுக்கீட்டு தீர்ப்பிலும் தமிழக அரசும் இதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. முன்னுதாரணங்கள் இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அந்த பாதையை மேற்கொள்ளாமல் தீர்ப்பை நடைமுறை படுத்தும் முடிவை மேற்கொண்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய அரசு தவறு என்று நினைக்கும் ஒரு விஷயத்தை புறம்தள்ள நினைத்தது. அதில் சட்டப்படி தீர்வு காண நினைத்து அதற்குண்டான அனைத்து வழிகளையும் சந்தித்தது. கடைசியில் நிலைமை இதுதான் என்று தீர்மானமானபின் அதை பின்பற்ற முடிவு செய்துள்ளது. இதில் குற்றம் காண்பதற்கு ஒன்றுமில்லை. இரண்டு மாதங்கள் பிள்ளைகளின் படிப்பு வீணானது என்று கருதுவோரின் கவனத்திற்கு: 1985 - ல் ஆசிரியர்கள் சுமார் 47 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்பொழுது மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. 1987 - ல் மரம்வெட்டியார் செய்த மறியல் காரணமாக எண்ணற்ற பள்ளிக்கூடங்கள் இயங்காமல் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இத்தகையோர்தான் இன்று மாணவர்களின் படிப்பைப்பற்றி பெரும் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

2. நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் எப்படி தலையிடுகின்றன என்பது புரியவில்லை. முந்தைய அரசின் கொள்கை முடிவு தற்போதைய அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனும்போது அதை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மாற்றுவது அந்த அரசின் தலையாய பணியாகிறது. அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்தே அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை தவறு என்று எப்படி கூற முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது மும்மொழிக்கொள்கையுடைய தமிழகம் கழகங்களின் ஆட்சியில் இருமொழி கொள்கைக்கு மாறியது. இதை தவறு என்று கூறி மும்மொழி கொள்கையே தொடர வேண்டும் என்று எப்படி கூற முடியும். கொள்கை முடிவுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறமாகாதவரை அதை தவறென்று கூற முடியாது. சமச்சீர் விஷயத்தில் நீதி மன்றங்கள் செய்திருப்பது இதுதான்.

3. கருணாநிதியின் சிறுபிள்ளைத்தனத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்ய இருந்த நிலையில் 'தமிழக அரசு அடம் பிடிக்கக்கூடாது, இதில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை' என்றெல்லாம் உபதேசித்த கருணாநிதி, இன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை கொண்டாடுவோம் என்று அறிக்கை விதித்திருப்பது கீழ்த்தனமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. (வட்டம், மாவட்டங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அணிவகுத்த நிலையில் கொண்டாட அங்கே யார் இருக்கிறார்கள் என்பது வேறு கதை) தங்கள் வீட்டு வாரிசுகளை இந்த சமச்சீர் திட்டத்தில் படிக்க வைத்து விட்டு இவர் கொண்டாடட்டும். ஏற்கெனெவே இந்தி ஒழிப்பு என்று ஒரு தலைமுறையையே தீர்த்து கட்டிய இவர்கள் இன்று சமச்சீர் என்ற பெயரில் தமிழினத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். இதைத்தான் கொண்டாட சொல்லியிருக்கிறார் போலும்.