Sunday, October 16, 2011

அக்கறையில்லாமல் "இடிந்தகரை"

ஆற்றின் இருபுறமும் கரைகள் வலுவாக இருந்தால்தான் நீரோட்டம் சீராக செல்லும், மக்களுக்கும் பயனளிக்கும். அவை தகுந்த பராமரிப்பில்லாமல் வலுவிழந்து போகும் நிலை ஏற்பட்டால் வெள்ள காலங்களில் நீர் வரத்து மிகுந்து அவை கரையை இடித்துக்கொண்டு ஊருக்குள் புகுந்துவிடும். நீர் வீணாவதோடு மக்களுக்கும் மிகுந்த பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்திவிடும். அதன் பிறகு அந்த 'இடிந்தகரை'யை சீர் செய்தபின்புதான் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும். இது யாவரும் அறிந்ததே. இத்தகைய ஒரு நிலையை தமிழகம் சந்தித்து வருகிறது, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் சமீப காலமாக உண்ணாவிரதம், மறியல் என்று பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இவர்களின் அச்சத்தை போக்கி உடனடி தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. போராட்டக்காரர்களும் தங்களுடைய போராட்டத்தில் நேர்மையை தொலைத்து வருகிறார்கள். இதில் யாருடைய நிலை பாடும் பாராட்டும் விதமாக அமையவில்லை. சம்பந்தப்பட்டோர் அனைவருடைய நிலைபாட்டாலும் தமிழகம் மட்டுமே இழப்பை சந்திக்கும் என்பது திண்ணம். 

மன்மோகன் சிங் அரசு:

ஆரம்பம் முதலே எந்தவொரு பொதுப் பிரச்சனையானாலும் அதில் கவனம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதோடு பிரச்சனை முற்றி நாட்டிற்கு மிகுந்த பேரிழப்பையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவது இவரது அரசின் தனித்தன்மை. அது காஷ்மீர், பயங்கரவாதம், நக்சலைட்டுகள், தெலங்கானா, நதிநீர் பிரச்சனை, ஊழல் என்று எந்த பிரச்சனையானாலும் நமக்கென்ன என்று இருப்பதோடு அந்த பிரச்சனைகளில் தங்களாலான அளவிற்கு என்னவென்னல்லாம்   கெடுதலை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து வருகிறது இந்த அரசு. இது இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்று பாதுகாவலனாக இருக்க வேண்டிய நிலையை விட்டுவிட்டு வேலியே பயிரை மேய்ந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. அப்படித்தான் கூடங்குளம் பிரச்சனையையும் கையாண்டு வருகிறார்கள். தங்களுக்குள் பிரச்சனை என்றால் அதுவும் சோனியாவையோ காங்கிரசையோ பாதிக்கும் என்றால் உடனே அதை தலையாய கடமையாக கொண்டு தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அதே சமயம் பொதுமக்கள் எக்கேடுகேட்டும் போகட்டும் என்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் மன்மோகன் அரசு மக்கள் பலநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. விவரம் அறியாத நாராயணசாமியை அனுப்பி பேச்சு நடத்துவது, கருணாநிதியுடன் கூட்டு வைத்திருக்கும் நிலையில் ஜெயலலிதா தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது என்று சற்றும் பொருந்தாத நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. மக்கள் இவ்வளவு தீவிரமாக போராட்டத்தில் குதிப்பார்கள் என்பதை முன்கூட்டியே உளவு துறை மூலம் கண்காணிக்க தவறியதோடு, பிரச்சனை முற்றிய நிலையிலும் அது ஏதோ இலங்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது போல் அமைதி காக்கிறது அரசு. அம்பானி குடும்பத்தில் குடுமி பிடி தகராறு என்றால் நேராக சென்று அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் சிதம்பரம் போன்ற வெட்கமற்றவர்கள் நிறைந்த மத்திய அரசு மக்களை சட்டை செய்யாமல் வேடிக்கை பார்ப்பது அநியாயம். ஆள தகுதியற்றவர்கள், வெறும் பொம்மை சர்கார் நடத்துபவர்கள், மக்களின் மன நிலையை புரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. 

ஜெயலலிதா அரசு:

முற்போக்கு சிந்தனை கொண்டவர், வளர்ச்சித்திட்டங்களில் கவனம் செலுத்துபவர், முன்வைத்த காலை பின்வைக்காதவர் என்று பலராலும் உதாரணம் காட்டப்பட்ட ஜெயலலிதா இன்று செய்வது அத்தனை சிறப்பையும் உதாசீனப்படுத்துவதாக உள்ளது. மின்பற்றாக்குறையால் தமிழகம் இருளில் மூழ்கி தடுமாரிவரும் வேளையில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை விரைவில் தொடங்கும் என்ற இனிப்பான செய்தியை கேட்டு தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இடியை போல அமைந்துவிட்டது இந்த போராட்டம். அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று முற்பட தவறியதோடு இது ஏதோ மத்திய அரசிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான தகராறு என்பது போல் ஆர்வமில்லாமல் இருக்கிறது இந்த அரசு. கருணாநிதி பாணியில் கடிதம் எழுதுவது, வேடிக்கைப்பார்க்க பன்னீர்செல்வம் தலைமையில் குழு அனுப்புவது என்று ஜாலியாக இருக்கிறது அரசு. உள்ளாட்சித்தேர்தல் காலம் என்பதால் 'நாங்கள் மக்கள் பக்கமே' என்று அறிவிக்கிறார் ஜெயலலிதா. என்ன, இன்னும் அவர் தலைமையில் 'வைகோ' பாணியில் போராட்டக்காரர்களோடு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் உட்காரவில்லை. அவ்வளவுதான். மற்றபடி எல்லாவகையிலும் மத்திய அரசிற்கு சங்கடமான நிலைப்பாட்டையே எடுத்துவருகிறது. போராட்டக்காரர்கள் விருப்பத்திணங்க அறிக்கையை மட்டுமே வெளியிட்டு வருகிறது இந்த அரசு. ஆனால் மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு பிரச்னைக்கு முடிவு காணும் எண்ணம் சிறிதும் இருப்பதாக இல்லை. இதில் ஜெயலலிதா பச்சையாக 'அரசியல்' பண்ணுவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கேட்டு பிரதமரை சந்தித்து மனு கொடுத்தார். ஆனால் இன்னமும் மத்திய அரசு மின்சாரம் வழங்கிய பாடில்லை (ஒருவேளை கருணாநிதியின் நெருக்குதல் காரணமாக இருக்கலாம். யார் கண்டது? 'மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை, மருமகன் சாகவேண்டும்' என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவராயிற்றே அவர்). போதாகுறைக்கு அவர் கேட்டுக்கொண்ட அளவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. சட்டசபையில் கூட இது பற்றி ஜெயலலிதா விரிவாக விளக்கம் கொடுத்திருந்தார். இந்த ஆண்டுக்கான (2011-12) நிதி பகிர்வு மட்டுமே தங்கள் கேட்டுக்கொண்ட அளவிற்கு இருந்ததே தவிர, வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் இலவசங்களுக்காக தாங்கள் கேட்ட தொகையை மன்மோகன் அரசு இன்னமும் ஒதுக்க வில்லை இது தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட மத்திய அரசிற்கு ஆதரவாகவோ அல்லது அது சம்பந்த பட்ட பிரச்னையை முடிக்க ஆர்வம் காட்டவோ ஜெயலலிதா முற்படுவார் என்று எதிர் பார்ப்பது சிறுபிள்ளைத் தனம். அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் அரசியல் நடத்த தவறாதவர் என்பதை மீண்டும் நிருபித்து வருகிறார். 'பங்காளியை பதம் பார்த்து வெட்டவேண்டும்' என்பது போல செயல்பட்டு வருகிறார். இல்லையென்றால் இஸ்லாமிய மக்களை கூட்டணியில் வைத்துக்கொண்டே மோடியை பதவியேற்பு விழாவிற்கு வரவழைக்கும் தைரியம் இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் செயல்பாடு அவருடைய கட்சிக்கு வேண்டுமானால் வாக்குகளை அள்ளித்தரலாம். ஆனால் ஆட்சிக்கோ தமிழகத்தின் வளர்ச்சிக்கோ சிறிதும் நன்மையளிக்காது. 

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி:

இதில் கருணாநிதியின் நிலைபாடுதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. மகள் உள்ளேயிருக்கும் இன்றைய நிலையில் மத்திய அரசை உதறித்தள்ளி விட்டு போராட்டக்காரர்களோடு கைகோர்க்கவும் முடியவில்லை.அது ஜெயலலிதாவை ஆதரிப்பது போலாகும். மத்திய அரசுக்கு ஆதரவாக போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கவும் முடியவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் வாக்குகளை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும். என்னதான் செய்வது. எதற்கும் இருக்கட்டும் என்று காலையில் ஆதரவாகவும், மாலையில் எதிர்ப்பாகவும் அறிக்கையை விட்டுக்கொண்டிருக்கிறார். எந்த பக்கம் ஜெயித்தாலும் அதை நாம் ஆதரித்தோம் என்ற நிலை தோன்றும் என்று குழம்பிக்கிடக்கிறார். மத்திய அரசு என்பது தங்கள் அரசு என்ற எண்ணம் இவருக்கு எந்த காலத்திலும் ஏற்பட்டதில்லை. அது ஏதோ காங்கிரசு அரசு என்றே இன்றளவும் எண்ணிவருகிறார். அதற்கு தாங்கள் ஆதரவு தருவதாக மட்டுமே நினைக்கிறார். அரசினால் ஏற்படும் 2G, 3G போன்ற ஆதாயங்கள் மட்டுமே தங்களுக்கு உரியது. அதற்கு ஏற்படும் சங்கடங்களை சந்திப்பது காங்கிரசின் கடமை என்று மட்டுமே சிந்திக்கும் உத்தமத்தலைவர் அவர். கட்சியிலும், வீட்டிலும் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே நேரம் போதாத அவரிடம், 'இந்த பிரச்னையை கண்டுக்கொள்ளுங்கள்' என்று சொல்வது நம்முடைய அறியாமை.  

போராட்டக்காரர்கள்:

மேற்கூறியவர்கள் ஏதோ தங்களுக்கு லாபம் தரும் நோக்கில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதை பாராட்டாவிட்டாலும் அதில் குறை காண முடியாது. ஆனால் தங்களுக்கு சிறிது லாபம் அற்ற, சொல்லப்போனால் தங்கள் மாநிலத்திற்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் நிலைப்பாட்டை போராட்டக்காரர்கள் மேற்கொள்ளுவது மிகவும் வருந்தத்தக்கது. சுமார் பதினைந்து வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு (போராடிவருவதாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நம்முடைய கவனத்தை இன்று ஈர்ப்பது போல் முன்னெப்போதும் ஈர்த்ததில்லை) இன்று உற்பத்தி தொடங்கும் நேரத்தில் அதற்கு முட்டுக்கட்டை போடுவது சிறிதும் நியாயமில்லை. இவர்களின் போராட்டத்தில் எந்த ஒரு நேர்மையும் இருப்பதாக நமக்கு தோன்றவில்லை. ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் போடவேண்டும் அப்போதுதான் உண்ணாவிரதம் வாபஸ் என்றார்கள்-தீர்மானம் போடப்பட்டது. மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை என்றார்கள்-பேசப்பட்டது, பேசிவிட்டு சென்னை திரும்பிய உடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என்றார்கள், அடுத்து மூன்று நாட்கள் என்றார்கள், உடனடியாக காலவரையற்ற உண்ணாவிரதம் என்றிருக்கிறார்கள். உண்ணாவிரதம் நடைபெற்று வரும் வேளையில் கூடங்குளம் தொழிலாளர்களை தடுத்திருக்கிறார்கள். அடுத்து தண்ணீர், பால் விநியோகம், போக்குவரத்து தடை என்று உள்ளேயிருக்கும் 900 க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிரார்கள். காந்திய வழி போராட்டம் என்று வீராப்பாக சொல்லிவிட்டு, காந்தி கண்டித்த அனைத்து வழிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இது யாரோ தூண்டி நடத்தும் போராட்டம் அல்ல. அந்த பகுதி மக்கள் ஒருங்கிணைந்து போராடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் கண்டு வருவது சில பாதிரிமார்கள் முன்னணியில் நிற்பதுதான். மக்களை நல்வழிபடுத்தவே மதங்கள். அவர்களுக்கு உண்மையை விளக்கி அமைதிவழியில் செலுத்தவே பாதிரிமார்கள். ஆனால் இவர்கள் நடைமுறைக்கு சிறிதும் உதவாத காரணங்களைக்கூறி மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அமைதியையும், மக்களின் அன்பையும் எப்போதும் வரவேற்ற ஏசுபிரானின் வழி செல்வதாக கூறுபவர்கள் இன்று ஒட்டுமொத்த மாநில மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் விதமாக நடந்துகொள்வது நன்மை பயப்பதாக இல்லை. 

போராட்டக்கார்கள் கூறும் காரணங்கள் வியப்புக்குரியதாகவும் அதே நேரத்தில்  எள்ளிநகையாடும் விதமாகவும் இருக்கின்றன. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை யும் அச்சத்தையும் போக்கும் விதமாக படித்த விவரம் அறிந்த வல்லுனர்களிடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமேயொழிய இப்படி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் என்ற பெயரில் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. இவர்களிடம் இன்று அரசு மண்டியிடுவதாக தோன்றலாம். ஆனால் அரசு இயந்திரம் என்பது 'கழுதை' போன்றது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் பொறுமை கொண்டது. ஆனால் அதற்கு சலிப்பு ஏற்பட்டு உதைவிட்டாலோ, கடித்து வைத்தாலோ அதை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. இதை இவர்கள் உணர்ந்தபாடில்லை. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அணுவுலை ஒன்று செயலிழந்து, ஆபத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டதை இவர்கள் உதாரணமாக கூறுகிறார்கள். அங்கே சுமார் பதினாறு பேருக்கு மேல் யாருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. அதையும் இரவுப்பகல் பாராமல் விஞ்ஞானிகளும் தொழிலாளிகளும் பாடுபட்டு முடிவுக்கு கொண்டுவந்ததை இவர்கள் என் பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இவர்களுக்கு ஒன்று நமது விஞ்ஞானிகள் மீதும், தொழிலாளிகள் மீதும் நம்பிக்கை இல்லை அல்லது இவர்கள் வறட்டு பிடிவாதம் பிடிகிறார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. சுனாமி, நிலநடுக்கம், இடி, மின்னல், பெருவெள்ளம் போன்ற இயற்கைச்சீற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். அவை எங்கே, எப்பொழுது, ஏற்படும் என்றோ அவ்வாறும் ஏற்படும்பொழுது நமக்கு என்ன வகையான இழப்புகளை ஏற்படுத்தும் என்றோ, அந்த இழப்புகளை சந்திக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றோ யாராலும் அறுதியிட்டு கூற முடியாது. பொருளாதார மற்றும் விஞ்ஞான துறையில் நன்கு வளர்ச்சி பெற்ற நாடுகளே உறுதி கூறமுடியாத நிலையிலும் அவை அணுவுலை போன்ற வற்றை கையாண்டு வருவதை நாம் பார்க்கிறோம். அணுவுலை வெடித்துத்தான் நமக்கு முடிவு வரும் என்பதில்லை. அனுவுளையினால் ஏற்படும் ஆபத்தை விட இன்றைய நிலையில் நாம் பல ஆபத்துக்களை உடன் வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் உடனே நிறுத்தவேண்டும் அல்லது மூடிவிட வேண்டும் என்று கொடிபிடிக்கச்சொன்னால் இந்தியா மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடும் அவ்வளவே. உதாரணத்திற்கு சிலவற்றை பட்டியலிடுகிறோம். இவற்றை மூட நம்மிடம் தகுந்த காரணங்கள் உள்ளன. 

1. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சாயப்பட்டறைகள் அதிகம். தமிழகத்தின் அந்நிய செலாவணியை கணிசமான அளவிற்கு உயர்த்திய பெருமை இந்த பட்டறைகளுக்கு உண்டு. அங்கே பல்லாயிரக்கணக்கான  தொழிலாளிகள் பணிபுரிகிறார்கள். அவர்களை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இன்று இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல முன்னணி ஜவுளி உற்பத்தி கம்பெனிகளோடு போட்டிப்போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில் உள்ள இந்த சாயப்பட்டறைகளை மூடவேண்டும் என்று பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நீதிமன்றங்களும் தலையிட்டு கம்பெனிகளுக்கு சீல் வைத்த அவல நிலை கூட தோன்றிவிட்டது. இவர்கள் கூறும் காரணம் சாயக்கழிவுகள் நிலத்தடிநீர், ஆற்றுநீர், குளத்துநீர் என்று அனைத்தையும் மாசுபடுத்தி, மக்களின் சுகாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. உண்மைதான். அதற்கு தீர்வாக கம்பெனிகளை மூடுவது சரியாகாது. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை யார் சரிகட்டுவது. சாயக்கழிவுகளை சுத்தப்படுத்தி ஆற்றில் விடவேண்டும் என்ற நடைமுறையை  பல அரசுகள் கண்டுக்கொல்லாததே இந்த பரிதாப நிலைக்கு காரணமேயன்றி சாயப்பட்டரைகளினால்தான் மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை தோன்றிவிட்டது என்று புலம்புவது பத்தாம் பசலித்தனம். 

2. இன்று அசுரவளர்ச்சியை சந்தித்துவருவது தொலைத்தொடர்புத்துரைதான். யார் கையிலும் செல்போன்கள் (கைப்பேசி என்று கூறுவது சரியல்ல) காணப்படும் இந்த காலத்தில் செல்போன் கம்பெனிகளை மூட வேண்டும் என்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். மக்களின் வசிப்பிடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில்தான் செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும் என்பது விதி. அத்தகைய கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மக்களின் மன நிலையையும், உடல் நிலையையும் பாதிக்கின்றன. ஆண்மை, பெண்மை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை வமிசம் முழுமைக்கும் ஏற்படுத்தும் அபாயத்தை அவை சுமந்திருக்கின்றன. இதனால்தான் இந்த விதி இருக்கிறது. ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டின் மீதும் செல்போன் கோபுரத்தை காண்கிறோம். பள்ளிகள், மருத்துவமனைகள், அடர்ந்த குடியிருப்புகள் என்று எங்கே நோக்கினும் கொபுரங்கல்தான். இவற்றின் கதிர்வீச்சு அபாயத்தை மக்கள் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அணுவுலை கதிர்வீச்சு அளவுக்கு அபாயத்தை தரும் இந்த செல்போன் கோபுரங்களை மக்கள் அனுதினமும் நடைமுறையில் சந்தித்துத்தான் வருகிறார்கள். அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கோபுரங்களை அமைத்து மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் இந்த செல்போன் கம்பெனிகளை மூட வேண்டும் என்று யாரும் போராட முன்வருவதில்லை. 

3. சாலை, ரயில் விமான போக்குவரத்து என்று அனைத்திலும் பாதிப்பையும், சவால்களையும் நாம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். உலகில் மற்ற எந்த துறையிலும் ஏற்படாத அளவிற்கு உயிரிழப்பு சாலை விபத்துக்களில்தான் ஏற்படுகின்றது. போர்காலங்களில் கூட இத்தகைய சேதாரம் ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான். ரயில் ஓட்டுனர், விமான ஓட்டிகள் போன்றோரின் கவனக்குறைவினாலும், இயந்திரக் கோளாறுகளாலும் ஆண்டுதோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது விமானங்கள் குடியிருப்புப்பகுதியில் விழுந்து அங்கே வீடுகளுக்கும் மக்களுக்கும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய காரணங்களால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தை முடக்கலாம். ஆனால் அவ்வாறு கோருவது. அறியாமை. அவற்றில் உள்ள குறைகளை களைந்து, பாதுகாப்பு உக்திகளை பலப்படுத்த வேண்டுமே அன்றி அவற்றை புறக்கணிக்க கூடாது.

4. சுனாமி ஏற்படும்பொழுது இந்த அணுவுலைகள் வெடித்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற பீதியை அளவுக்கு அதிகமாக பரப்பியதைத்தவிர இவர்கள் வேறு நல்ல காரணங்களை சொல்லவில்லை. இன்றைக்கும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் கடற்கரையையே தங்கள் வாழ்விடமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டிருக்கிறார்கள். சுனாமி வரும் பொழுதும் பூகம்பம் வரும்பொழுதும் இந்த எண்ணற்ற மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். இவர்களையெல்லாம் கடற்கரையோரம் குடியிருக்கதீர்கள், கடலை நம்பி தொழில் செய்யாதீர்கள் என்றெல்லாம் தடுக்க முடியுமா. அவ்வாறு செய்வது அறியாமையன்றோ? அவ்வளவு ஏன். இன்றைக்கு போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் பாதிரியார்களை பார்த்து கேட்கிறோம்: கடற்கரையோரம் கட்டப்பட்ட எண்ணற்ற தேவாலயங்களைஎல்லாம் அப்புறப்படுத்தலாமே! அங்கே தேவாலயங்கள் இருப்பதால்தான் மக்கள் பிரார்த்தனைக்காக வருகிறார்கள். அப்போது சுனாமி ஏற்பட்டால் அவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்களே. அத்தகைய பாதிப்பை சந்திக்க மக்களை வரவேற்கும் இந்த தேவாலயங்களை கடற்கரைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் அல்லவா? இது என்னவிதத்தில் அநியாயமான கோரிக்கையோ அத்தகையதே கூடங்குளம் கோரிக்கையும். சமீபத்திய சுனாமியின் தாக்குதல், எங்கெங்கெல்லாம் தேவாலயங்கள் இருக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் பயங்கர இழப்பை ஏற்படுத்தியிருந்தது  என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

5. மாற்று எரிசக்தி ஏற்பாட்டை செய்யுங்கள் என்று போராட்டக்காரர்கள் மின்சார தீர்வாக கூறுவது விந்தைதான். அந்த மாற்று ஏற்பாடுகளில் எல்லாம் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை என்பது போல் உள்ளது அவர்கள் கூறும் யோசனை. நிலக்கரிச்சுரங்கங்களில் எத்தகைய அபாயம் உள்ளது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லையா? அங்கே பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை தோற்றுவிப்பதோடு, பூமியை கண்டபடி குடைந்து செல்வதால் அந்த பகுதிகளில் மண்சரிவு, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் கூட உருவாக காரணமாக அமைந்து விடுகின்றன. அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் நிலக்கரி பதிவுகள் அந்த சுற்றுவட்டாரத்தையே மாசுபடுத்துவதோடு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களை மக்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற காரணங்களினால் அனல் மின் உற்பத்தியை நாம் தவிர்க்கத்தா வேண்டும். காற்றாலை மின் உற்பத்தி நம்முடைய தேவைகளுக்கு ஈடாக அமைய வில்லை. தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாக காற்று சரிவர வீசாததால் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களினால் இவர்கள் கூறு மாற்று யோசனை பலனளிக்காது.

மேற்கூறிய காரணங்கள் எத்தகைய வகையில் நியாயமோ அந்த அளவிற்கு இவர்களின் போராட்டத்திலும் அநியாயம் உள்ளது. பாதுகாப்பை பலபடுத்துங்கள், எங்கள் அச்சத்தை போக்குங்கள், பாதிப்பு ஏற்படுமாயின் எங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை அதிகப்படுத்துங்கள், எங்கள் பகுதி மேம்பட வாய்ப்பளியுங்கள், எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்று கோரிக்கை வருமாயின் அது நியாயமே. ஆனால் இல்லாத காரணத்தை கற்பனையாக உருவாக்கி அதற்கு மக்களை படைதிரட்டி போராடி அணு உலையையே மூடு என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது படித்த சுயசிந்தனையுள்ள யாவரும் உணர்ந்துள்ளனர். இதில் இன்னுமொரு செய்தி கவனிக்கத்தக்கது. குழந்தைகளை எல்லாம் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள். நன்கு வளர்ந்துவிட்ட நமக்கே சிந்திக்கவும் பிரச்னையை புரிந்துக்கொள்ளவும் திராணியில்லாத பொழுது, அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு என்னத்தெரியும்? இவர்கள் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதோடு, அவர்களை போராட்டம் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை தவிர்க்க இயலும்.  

நம் தலைவிதி! என்ன நடக்குமோ?

யாருக்குமே தேசத்தின் மீதோ, தேச வளர்ச்சியிலோ அக்கறையில்லாமல் செயல் படுவதை பார்க்கும்போது அந்நிய சக்தி ஏதேனும் இவர்களை பின்னிருந்து இயக்குகிறதா என்கிற சந்தேகம் வலுக்கிறது. அதற்கு இடம் கொடாமல் சம்பந்தப்பட்டவர்கள் நடந்துக்கொண்டால் நன்மையளிக்கும். அவர்களுக்கு தெரியாத தொன்றுமில்லை. நாம் சொல்லித்தெரிந்துக் கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. என்ன செய்வது? காலம் வலிமை வாய்ந்தது. இன்று பலம் பொருந்தியவனாக தோற்றமளிக்கும் ஒருவனை நாளைக்கு ஒப்புக்குச் சப்பாணியாக, செல்லாக்காசாக்கும் வன்மை படைத்தது. இதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.   

No comments:

Post a Comment