Friday, May 20, 2011

ஆற்றங்கரை மரமும் ...

இன்றைய தினம் (20/05/2011) உண்மையிலேயே ஆச்சரியமும் அதிசயமும் கலந்த ஒரு நிகழ்வை இந்திய திருநாடு கண்டிருக்கிறது. ஆம். 2G ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கும் ஒரு கட்சியின் தலைவரின் மகள் இந்தியாவில் கைது செய்யப்படுவது என்ன அவ்வளவு சுலபமான விஷயமா? சமீபத்தில் தான் தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் கை மாறியது. அதுவரை அரசு பொறுப்பிலிருந்த கட்சியின் ஒரு சாதாரண மாவட்ட, வட்ட பொறுப்பாளர்களின் உறவினர்களை கூட போலிசு தொட முடியாத நிலையிலிருந்து அந்த கட்சியின் மிகப்பெரும் சக்தியான அதன் தலைவரின் மகளையே திஹார் சிறையிலிட முடியும் என்றால், தமிழக வாக்காளர்கள் கொடுத்த அசைக்க முடியாத தீர்ப்புத்தான் இதற்கெல்லாம் காரணம். ஜனநாயகத்தின் மீதும் மற்றும் நம் நாட்டின் நீதி பரிபாலனத்தின் மீதும் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது இந்த செய்தி. 
கருணாநிதி என்ற ஒரு தனி மனிதரின் செயல் பாடுகளின் விளைவுதான் இன்றைய தினம் திஹார் சிறை வரை நீண்டிருக்கிறது. அரசியல் என்ற போர்வையில் அவர் செய்து வந்த பலவிதமான காரியங்கள் இன்று அவரை நிழல் போல துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. 
தமிழ், தமிழின உணர்வு, என்று மொழி வெறியை மாநில மக்கள் மீது பரப்பி அதில் குளிர் காய்ந்த அதே நேரம், இலங்கையில் அப்பாவித்தமிழர்கள் கொடுங்கோலர்களின் தாக்குதல்களுக்கு பலியான பொது மத்திய காங்கிரசு அரசின் மூலம் கிடைத்த பதவி சுக போகங்களையே பிரதானமாக எண்ணி வாய் மூடி மௌனம் சாதித்தது கொடுமை அல்லவா? இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு இறந்த போதெல்லாம் இந்திய பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி அதற்கு மேல் ஒரு துரும்பை கூட அசைக்காதது பாவம் அல்லவா?
வாஜ்பாய் அரசில் பங்கிருந்து மாறன் உடல் தகனம் செய்யும் மட்டும் இருந்துவிட்டு உடனடியாக பதவியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி மாறியது மிகப்பெரிய துரோகம் அல்லவா?
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரின் பெற்றோர்களை வைத்தே அவன் எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்ல வைத்தது பாவம் அப்பாவா?
தங்கள் பிள்ளை, பெண்களை இந்தி படிக்க வைத்து விட்டு மற்றைய தமிழர்கள் படித்து விடாமல் இருக்க போலி இந்தி எதிர்ப்பை காட்டியது கயமைத்தனமான பாவம் அல்லவா? அவ்வாறு இந்தி தெரிந்திருப்பதால்தான் தயாநிதி மாறனை மத்திய மந்திரியாக்கினோம் என்று கூசாமல் கூற நேர்ந்ததே அது துரோக பாவமல்லவா?
ஆரிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று ஒரு புறம் பேசிகொண்டே, மறுபுறம் பார்ப்பன வக்கீல்கள், பார்ப்பன டாக்டர்கள், பார்ப்பன பத்திரிக்கையாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் என்று ஏராளமானோருடன் நல்லுறவை வைத்து குலாவி வந்தது இன பாவமல்லவா?
கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசி, இந்து கடவுளர்களையும், வழிபாட்டு முறைகளையும் பழித்து, அவர்களின் பண்டிகைகளை கிண்டல் செய்து வந்த அதே வேளையில், தங்கள் குடும்ப பெண்கள், பிள்ளைகள் கோயில்களுக்கு செல்ல ஊக்குவித்து, தானும் மஞ்சள் துண்டு, பவழ மோதிரம், பட்டு வேட்டி என்று வேடம் தரித்து வந்தது கபட பாவமல்லவா?
பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதாவை எவ்வளவு அவமானப்படுத்த வேண்டுமோ அவ்வளவும் செய்து அவரை நாக்கூசும் வண்ணம் வசை மாறி பொழிந்து வந்த இவர்கள் ஒட்டு மொத்த பெண் இனத்தையே கொச்சை படுத்தியது கொடூர பாவமல்லவா?
 இப்படி ஏராளமான பாவங்கள் செய்து வந்ததின் விளைவு அவை இன்று வரை இவர்களை விட்டு அகலவில்லை என்பது தெளிவாகிறது. "ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழுமன்றே" என்ற வாக்கியங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. இறைவன் நமக்கு நல்ல வாழ்வை வளத்தை அளித்திருக்கும்போழுது அதன் மூலம் எளிய வாழ்க்கையை நடத்தி எளியோருக்கு உதவி புரிந்து வாழ வேண்டும். தலை கால் புரியாமல் ஆடினால் அது ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தும். 
இன்றைய நிலையில் கருணாநிதி சொல்லொணா துயரில் ஆழ்ந்திருப்பார். தன்னை கைது செய்து சிறையிலிட்டிருந்தாலும் அவருக்கு இத்தகைய துயர் இருந்திருக்காது. தாம் மிகவும் நேசிக்கும் தன் மக்கள் துயருறுகிறார்கள் என்பதை காணும் பொது அத்துயர் பன்மடங்காகிறது. உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் துயரங்கள் பலவகையாயினும் புத்திர சோகம் என்பது கொடுமையானது. தம் மக்கள் படும் அல்லலை காண எந்த பெற்றோராலும் முடியாது. 
தசரதன் ராமனின் பிரிவை தாங்கவொண்ணாது தன் உயிரையே மாயத்துக்கொண்டுவிட்டான். மகாபாரதத்தின் திருதராட்டிரனின் நிலையோ இன்னும் பரிதாபகரமானது. சிறு வயது முதல் தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தட்டி கேட்கவில்லை. அவர்கள் செய்யும் பாவ காரியங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட செய்தது அவனுடைய பிள்ளை பாசம். அவர்கள் நேர்மை, நியாயம், நீதி, தருமம் போன்ற நல்ல செயல்களை துளியும் மதிக்காமல் தீய செயல்கள் புரிவதிலேயே சிறந்து விளங்கும் படி செய்து விட்டது திருதராட்டிரன் அளித்த இடம்தான். அவர்களுடைய அத்தகைய செய்கை சொந்த சகோதரனின் மனைவியின் சேலையை உரிந்து மான பங்க படுத்தும் அளவிற்கு விசுவ ரூபம் எடுத்து விட்டது. அப்பொழுதும் அவன் வாய் மூடி அவற்றை ஆதரித்து வந்தானேயன்றி  அவர்களை தட்டிக்கேட்கவில்லை. அத்தகைய பிள்ளைப்பாசத்திற்கு அவன் அடிமைபட்டுக்கிடந்தான். அது அவர்களுடைய இனத்தையே அழித்தது. அத்தகைய ஒரு நிலையைத்தான் கருணாநிதியின் பிள்ளை பாசம் தி.மு. க.விற்கும் ஒரு மீள முடியாத அளவிற்கு தீங்கு பயத்திருக்கிறது.       

No comments:

Post a Comment